புதுச்சேரி,
புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி இன்று இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டமாகக் கூடுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.