தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மதம் மாற்றியதாக கூறி ஒரு குடும்பம் மீது தாக்குதல்..!

கர்நாடகாவில், தங்கள் அண்டை வீட்டாரை கட்டாய மதம் மாற்றியதாக கூறி ஒரு குடும்பத்தைத் தாக்கியுள்ளனர்.

பெலகாவி,

கர்நாடகாவில், தங்கள் அண்டை வீட்டாரை கட்டாய மதமாற்றியதாக குற்றம் சாட்டி, வலதுசாரி இந்துத்துவா குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு குடும்பத்தைத் தாக்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முதலகி பகுதியில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி அன்று பாஸ்டர் அக்ஷய்குமார் காரகன்வி தனது வீட்டில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது வலதுசாரி குழுவைச் சேர்ந்தவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு பிரார்த்தனை அமர்வை நிறுத்தக் கோரினர். அக்கம்பக்கத்தினரை சட்டவிரோதமாக மதமாற்றியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து பாஸ்டர் கொடுத்த புகாரின் பேரில் ஏழு பேர் மீது கட்டபிரபா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 143 (கலவரம்), 448 (அத்துமீறி நுழைதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 392 (கொள்ளை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.