தேசிய செய்திகள்

கணவர் கண்முன்னே பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சி - மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

பெண்ணை வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்ட மர்ம நபர்கள், அவரை தரதரவென்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் என்ற கிராமத்திற்கு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் வாகனத்தை திடீரென்று மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் அந்த தம்பதியை தாக்கி அவர்களின் மொபைல், பர்ஸ் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை பிடுங்கிக் கொண்டனர். பின்னர் அந்த பெண்ணை வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்ட மர்ம நபர்கள், அவரை தரதரவென்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.

மனைவியை காப்பாற்றுவதற்காக கணவர் அந்த நபர்களை துரத்திச் சென்றார். அவரை அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கி நிலைகுலைய வைத்தனர். பின்னர் அவரின் கண் முன்னாலேயே அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். 26 வயதான அந்த பெண், உதவி கேட்டு கத்தி கூச்சல் போட்டார்.

இதற்கிடையில், சாலையில் இருசக்கர வாகனம் விழுந்து கிடப்பதைப் பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் அங்கே நின்றுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவே, உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், பெண்ணை வன்கொடுமை செய்யும் முயற்சியை கைவிட்டு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தர்னாவதா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி பப்லூ பஞ்சாரா(23), சோட்டு பஞ்சாரா(28), சர்தார் பஞ்சாரா(30), மகேந்திர பஞ்சாரா(20) மற்றும் தினேஷ் பஞ்சாரா(28) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தம்பதியினரின் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.