தேசிய செய்திகள்

நெட் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆங்கிலம், வணிகவியல், சோஷியாலஜிக்கு செப்டம்பரில் மறுதேர்வு

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது.

புதுடெல்லி,

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நெட் தேர்வு தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஆங்கிலம், வணிகவியல், சோஷியாலஜி பிரிவுகளில் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’பல்கலை உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான யுஜிசி நெட் தேர்வுகள், கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 87 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி பாடங்களில், தவறான மொழிப்பெயர்ப்பு, எழுத்துப் பிழைகள், ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டிருப்பது போன்ற குளறுபடிகள் கண்டறியப்பட்டது.

மறுதேர்வு

இதையடுத்து, ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரையில் ஆங்கிலமும், அதே நாளில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையில் வணிகவியல் தேர்வும் நடைபெற இருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 10ம் தேதி சோஷியாலஜி தேர்வும் நடைபெற இருக்கிறது.

தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த மூன்று பாடங்களின் மறுதேர்வுக்கு கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

தாமதம் ஏற்படாது

அதேவேளையில், மற்ற 84 பாடங்களுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும். இந்த 3 பாடங்களின் மறுதேர்வால், ஆராய்ச்சி உதவித்தொகைக்கான இடங்கள் ஒதுக்கீடு மற்றும் சான்றிதழ் வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படாது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.