தேசிய செய்திகள்

லாரி மீது ஆட்டோ மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: திருமண வீட்டிற்கு சென்ற போது சோகம்

லாரியின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது

திருப்பதி,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வேணு குண்டபள்ளியைச் சேர்ந்தவர் மாதவி (வயது 37). இவர் தனது மகள் மேனகா (15), தம்பி ராஜசேகர் (25) மற்றும் உறவினர்கள் 11 பேருடன் திருப்பதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் சென்றனர்.அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். இவர்கள் சென்ற ஆட்டோ பாகாலா மண்டலம், பூதலப்பட்டு-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

சோதனை சாவடி அருகே

அப்போது பெங்களூருவில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி வந்தது. அங்குள்ள வாகனச் சோதனைச் சாவடியில் இருந்த ஊழியர்கள் லாரியை நிறுத்துவதற்காக விசில் ஊதினர். விசில் சத்தத்தைக் கேட்ட லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வெளியே வீசப்பட்டனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மாதவி, அவரது மகள் மேனகா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மாதவியின் தாய் பேபி (50), அவரது தம்பி ராஜசேகர் (25) ஆகியோர் இறந்தனர்.