புதுடெல்லி,
ஆஸ்பத்திரிகளில் உரிய கட்டமைப்பு வசதிகளுடன் இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது. தற்போது, ஆஸ்பத்திரிகளில் பகல் நேரத்தில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. இரவு நேரத்திலும் நடத்த அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குனரகத்தின் தொழில்நுட்ப குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது.
அந்த கூட்டத்தில், சில நிறுவனங்கள் ஏற்கனவே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
தொழில்நுட்ப முன்னேற்றத்தால், பிரேத பரிசோதனைக்கு தேவையான விளக்கு ஒளி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கின்றன. எனவே, இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்துவது சாத்தியம்தான்.
உரிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் இரவு நேர பிரேத பரிசோதனையை அனுமதிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. இதன்மூலம் உறுப்பு தானம் பெற முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆதாரம் சிதைந்து போகாத அளவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை ஆஸ்பத்திரி பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதே சமயத்தில், கொலை, கற்பழிப்பு, தற்கொலை, மர்ம சாவுகள், சிதைந்த உடல்கள் ஆகிய விவகாரங்களில் இரவு நேர பிரேத பரிசோதனை அனுமதிக்கப்படாது. மேலும், சந்தேகம் எழுவதை தவிர்க்க பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வழக்கு தேவைக்காக அதை பாதுகாத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.