ஸ்ரீநகர்,
உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப் படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது. சியாச்சின் பகுதியில் முகாம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சியாச்சின் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தகவலறிந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் விரைந்து சென்ற மீட்புப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.