புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, திருட்டு சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் டெல்லி முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 497 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
2024-ம் ஆண்டில் டெல்லியில் 1,80,973 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக, வாரத்திற்கு கிட்டத்தட்ட 3,480 வழக்குகளும், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 497 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது தேசிய மொத்த எண்ணிக்கையில் 73.3 சதவீதமாகும். இது இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களை விட அதிகமாகும்.
இதனால் இந்தியாவில் திருட்டு சம்பவங்களின் தலைநகராக டெல்லி மாறிக்கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த அறிக்கையின்படி, மும்பை 10,854 திருட்டு வழக்குகளுடனும் (4.4 சதவீதம்), பெங்களூரு 9,229 திருட்டு வழக்குகளுடனும் (3.7 சதவீதம்) மற்றும் ஜெய்ப்பூர் திருட்டு 9,051 வழக்குகளுடனும் (3.7 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.