ஜாம்ஷெட்பூர்,
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் கடந்த 30ந் தேதி 13 தொகுதிகளில் நடந்தது. 2வது கட்ட தேர்தல் 20 தொகுதிகளில் வரும் 7ந் தேதி நடக்கிறது.
2ம் கட்ட தேர்தலை சந்திக்கும் ஜாம்ஷெட்பூரிலும், குந்தி என்ற இடத்திலும் பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் இன்று நடந்தது. அவற்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசன பிரிவு 370 பற்றி நாடு விடுதலை அடைந்த நாள் முதல் பேசப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு தற்காலிகமானது என்று அரசியல் சாசனம் கூறியது. இப்போது அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது.
ஒட்டு மொத்த நாட்டு மக்களின் ஆதரவும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் கிடைத்தது. நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படுகிற நடவடிக்கையில் நாட்டு மக்களின் ஆசி கிடைக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது என்றார்.