பெங்களூரு,
மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்றும், தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) பந்த் நடத்தப்பட உள்ளது.
காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை.
இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதற்கிைேடய, கடந்த மாதம் (ஜூலை) தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக கன்னட கூட்டமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்டு 13-ந் தேதி (அதாவது இன்று) பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தது.
கர்நாடகவில் பந்த் நடத்த கடந்த மாதம் 31-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, காவிரி படுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை தவிர்த்து மற்ற 3 அணைகளும் (கபினி, ஹாரங்கி, ஹேமாவதி) நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைகளுக்கு தண்ணீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) திட்டமிட்டபடி பந்த் நடைபெறுமா?, இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடுவதற்கு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி பந்த் நடக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் கர்நாடகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பந்திற்க்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கன்னட கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா கோவிந்த், கன்னட அமைப்புகளின் தலைவர்களான பிரவீன் ஷெட்டி, சிவராமே கவுடா உள்ளிட்டோர் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுபோல், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிக்கூடங்களும் ஆதரவு இல்லை என்றும், எப்போதும் போல் பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுபோல், கடந்த மாதம் 31-ந் தேதி முழு அடைப்புக்கு ஆதரவு அளித்திருந்த பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் தங்களது ஆதரவை திரும்ப பெற்றுள்ளன.
அதே நேரத்தில் பந்த் நடத்த ஆதரவு அளிக்கும்படி கோரி பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளுக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி நதிநீர், மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பந்த் நடத்த அழைப்பு விடுத்தோம். கடந்த மாதம் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்தனர். அப்போது ஆதரவு கூறிவிட்டு, எனது நண்பர்கள் இப்போது ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள். யார் ஆதரவு அளித்தாலும், அளிக்காவிட்டாலும், கர்நாடகத்தில் நாளை (இன்று) பந்த் நடப்பது உறுதி, என்றார்.
எனவே இன்று நடைபெறும் முழுஅடைப்பு காரணமாக கடைகள் மூடப்படுமா?, பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் ஓடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும், பந்த் நடத்த வேண்டாம் என்றும் கன்னட கூட்டமைப்புக்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் பிரியங்க் கார்கே, பால கிருஷ்ணா உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.