கவுகாத்தி,
வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள மாநிலம் அசாம். இம்மாநிலத்திற்குள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் நுழையும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, அசாம் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இருநாட்டு எல்லையில் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் இருந்து இளைஞர் சட்டவிரோதமாக அசாமிற்குள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அசாமின் ஹைலஹண்டி மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் வங்காளதேசத்தை சேர்ந்த ஷஹித் அகமது (வயது 42) என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வங்காளதேசத்தின் சைஹட் மாவட்டம் ரசுல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அசாமில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
ஷஹித் அகமது கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேகாலயாவுக்குள் நுழைந்துள்ளார். அங்கு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவரும் மேகாலயாவில் இருந்து வங்காளதேசம் சென்றுள்ளனர். பின்னர், ஷஹித் அகமதுவின் மனைவிக்கு இந்திய குடியுரிமை கிடைத்த நிலையில் அவர் தனது மகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஷஹித் அகமதுவின் மனைவி தனது மகளுடன் அசாமில் வாழ்ந்து வந்தார். ஆனால் ஷஹித் அகமது வங்காளதேசத்தில் வசித்து வந்தார்.
இதையடுத்து மனைவி, மகளை மீண்டும் வங்காளதேசத்திற்கு அழைத்து செல்ல அகமது சட்டவிரோதமாக அசாமிற்குள் நுழைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அகமதுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.