தேசிய செய்திகள்

இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி சந்திக்க மறுத்தாரா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி சந்திக்க மறுத்தாக தி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்திக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து தலைநகர் லண்டன், பக்கிம்காம்ஷைர் ஆகிய நகரங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் பிரிட்டன்-இந்தியா வாரம் என்ற பெயரில் இரு நாள் மாநாடும், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரிட்டனைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கலந்து கொண்டார். விடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய நிதி மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கெடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக பிரிட்டனுக்கு அவர் பயணம் செல்லும் திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வகுத்திருந்தது. ஆனால், அந்த பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார். இந்நிலையில், நிர்மலா சீதாராமன் தனது பிரிட்டன் பயணத்தை கைவிட்டது ஏன்? என்பது குறித்த பின்னணி தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அந்த பத்திரிகை செய்தியில்,

லண்டன், பக்கிம்காம்ஷைர் நிகழ்ச்சியில் பங்கெடுக்க பிரிட்டனுக்கு வரும்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சனை ஜூன் 20 முதல் 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு விவகாரம், பாதுகாப்பு தளவாட கொள்முதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்திருந்தார்.

இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி, வில்லியம்சனிடம் இந்திய அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பே கோரிக்கை விடுத்தனர். ஆனால், நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு வில்லியம்சன் மறுத்து விட்டார். வில்லியம்சனை சமாதானப்படுத்தி, நிர்மலா சீதாராமனை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் பிரிட்டன் நிதியமைச்சர் உள்ளிட்ட 2 அமைச்சர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. இதைத் தொடர்ந்தே, பிரிட்டன் பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

நிர்மலா சீதாராமன் மறுப்பு

சண்டே டைம்ஸ் இதழில் வெளியான செய்திக்கு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:- இது அடிப்படை முகாந்திரமில்லாத செய்தி. இந்தியா- இங்கிலாந்து இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. 2 பேரும் சந்தித்து பேசுவதற்கான ஏதுவான தேதி திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் என தெரிவித்து உள்ளார். நிர்மலா சீதாராமனின் டுவிட்டை தொடர்ந்து இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி வில்லியம்சன், நானும் இந்த சந்திப்பை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு