பெங்களூரு,
செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அவரது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுராவில் வசித்து வந்தவர் ராகவேந்திரா(வயது 38). இவரது மனைவி சுருதி(வயது 34). இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டிரைவரான ராகவேந்திரா, பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வந்தார். விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுருதியும் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த தம்பதியின் 2 குழந்தைகளும் தாவணகெரேயில் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதுபோல், நேற்று முன்தினம் நள்ளிரவும் ராகவேந்திரா, சுருதி இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த ராகவேந்திரா தனது மனைவியை அடித்து தாக்கியதாக தெரிகிறது. பின்னர் வீட்டில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ராகவேந்திரா கண்மூடித்தனமாக தாக்கினார்.
இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த சுருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், ஆத்திரத்தில் மனைவியை கொன்ற ராகவேந்திராவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த எச்.ஏ.எல். போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தம்பதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது சுருதி எந்த நேரமும் செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்த வண்ணம் இருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் சுருதி ரீல்ஸ் வீடியோ பார்த்தபடி இருந்ததால் ஏற்பட்ட தகராறில், அவரை கொன்றுவிட்டு ராகவேந்திரா தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.