தேசிய செய்திகள்

பெங்களூரு: ஓட்டலில் பயங்கர தீ விபத்து; ஊழியர் சாவு- 4 பேர் கவலைக்கிடம்

பெங்களூரு நாகரபாவியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பெங்களூரு,

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகைமூட்டம் நிலவியது. மேலும் மேல்தளத்துக்கும் புகை பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் 5 பேரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. போலீஸ் விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.