பாட்னா
நாட்டிற்காக போரிட ராணுவத்தை விட 3 நாளில் போருக்குத் தயாராகிவிடும் திறன் படைத்தது ஆர்எஸ்எஸ் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலத்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு ஆறேழு மாதங்கள் தேவைப்படும் என்றும், ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பானது மூன்றே நாட்களில் போருக்கு ஆட்களை தயார் செய்யும். இதுவே எங்களின் திறமை.
நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றதும் அதற்காக உடனடியாக களமிறங்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. சட்டமும், அரசியலமைப்பும் இடம் கொடுத்தால் அதனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.
ராணுவத்தை தரம் குறைத்து ஆர்எஸ்எஸ்ஸை பெருமைப்படுத்தும் விதமாக மோகன் பகவத் பேசியுள்ளதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மோகன் பகவத் பேச்சு திரித்து கூறப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது.
மோகன் பகவத் ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை, ஆர்எஸ்ஸ் மற்றும் பொதுமக்களை தான் ஒப்பிட்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போர் என்று வந்தால் ராணுவம் அதற்கு ஏற்ப மக்களை தயார் படுத்த வேண்டும், அதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகலாம்.
ஆனால் ஆர்எஸ்எஸ் போர் என்று வந்தால் 3 மாதத்தில் தயாராகி விடும். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறது என்று தான் மோகன் பகவத் பேசியதாக அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.