பாட்னா,
நம்ம ஊரில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வீட்டிற்குள் பூட்டி வைப்பதை பார்த்திருப்போம். ஆனால், திருட்டு பயம் காரணமாக ஒரு நபர் தனது சொகுசு காரை வீட்டின் மொட்டை மாடியில் கொண்டு போய் நிறுத்திய வினோத சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் யாதவ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தபோது, ஆசை ஆசையாக புத்தம் புதிய ‘மஹிந்திரா ஸ்கார்பியோ’ கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை ஓட்டுவதற்காக டிரைவர் ஒருவரையும் வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
இந்த நிலையில், அந்த டிரைவர் திடீரென வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனால் சொகுசு காரை வீட்டின் முன்பு சும்மா நிறுத்தி வைக்கும் சூழ்நிலை உருவானது. அப்போதுதான் அவருக்கு ஒரு பெரிய கவலை தொற்றி கொண்டது. அதிநவீன வசதிகள் கொண்ட இந்த புது காரை, வீட்டின் முன்பு நிறுத்தினால் நள்ளிரவில் யாராவது திருடி சென்று விடுவார்களோ என்று மனோஜ் யாதவ் பயந்தார். காரை எப்படி பாதுகாப்பது என்று இரவு முழுவதும் யோசித்த அவர், ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார்.
அதன்படி, உடனடியாக ஒரு பெரிய ராட்சத கிரேன் வாகனத்தை வாடகைக்கு வரவழைத்தார். பின்னர், வீட்டின் முன்பு நின்ற தனது ஸ்கார்பியோ காரை கிரேனில் கயிறுகளால் பலமாக கட்டினார். அந்த காரை அப்படியே அந்தரத்தில் தூக்கி, தனது 2 அடுக்கு மாடி வீட்டின் மொட்டை மாடியில் பத்திரமாக இறக்கி நிறுத்தினார்.
இதைப்பார்த்து அந்த தெருவில் சென்ற பொதுமக்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள். தற்போது மொட்டை மாடியில் சொகுசு கார் கம்பீரமாக நிற்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றன.