தேசிய செய்திகள்

பீகார்: கல்வித்துறையில் அரங்கேறிய இசை மோசடி : தேஜஸ்வி யாதவ்

இசை ஆசிரியர்களே இல்லாத நிலையில், இந்த இசைக்கருவிகள் இசைப்பதற்காக வாங்கப்படவில்லை என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னா,

தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பீகாரில் உள்ள 76,000-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒரே ஒரு இசை ஆசிரியர் கூட இல்லை என்பதை அறியும்போது பீகார் மக்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆனால், ஊழல் மலிந்த இந்த அரசாங்கம், வெறும் இசைக்கருவிகளை வாங்குவதற்காகவே 158.44 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

இந்த ஊழல் அரசாங்கம் சிதார், சரோத், சாரங்கி, வயலின், புல்லாங்குழல், ஷெனாய், ஹார்மோனியம், சங்கு, தபலா, டோலக், டமரு, மணி போன்ற இசைக்கருவிகளை வாங்குவதற்காகவே 158.44 கோடி ரூபாயை வீணடித்துள்ளது.

இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்த இசைக்கருவிகளை கேட்டு வாங்கப்படவில்லை, மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எந்த பயிற்சியையும் அவர்கள் வழங்கவில்லை.

பள்ளிகளில் இசை ஆசிரியர்களே இல்லாத நிலையில், இந்த இசைக்கருவிகள் இசைப்பதற்காக வாங்கப்படவில்லை, மாறாக ஊழல் அருங்காட்சியகத்தை அலங்கரிப்பதற்காகவே வாங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என தெரிவித்தார்.

கேளாமலே ரத்தினங்கள் வந்து சேரும் கெஞ்சி கேட்டாலும் பிச்சை கிடைக்காது" – என்ற பழமொழியை என்டிஏ அரசாங்கம் மிக எளிதாகவே நிருபித்து வருகிறது. அதே வேளையில், ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பீகார் பள்ளிகளில் எத்தனை இசை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த தற்போதைய தரவுகள் எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. ஆசிரியர்களே இல்லாத பள்ளிகளில் இசைக்கருவிகள் இருந்து என்ன பயன்? அவை வெறும் தூசு படிந்து, வீணாக அழுகிப்போவதற்காகவா வாங்கப்பட்டன?

நேர்மை மற்றும் நல்லாட்சியின் போர்வையை போர்த்திக்கொண்டிருக்கும் முதலமைச்சரும், அவருடன் துணை முதலமைச்சர்கள் இருவரும் இதற்குப் பதிலளிக்க வேண்டும். ஒரே ஒரு ஆசிரியரை கூட நியமிக்காமல், ஒரு இசை ஆசிரியர் கூட இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இசைக்கருவிகள், வெறும் 'ஊழல் இசையை' இசைப்பதற்காகவே வாங்கப்பட்டனவா?

இந்த கொள்முதல் நடவடிக்கையில் காணப்பட்ட அவசரமும், வெளிப்படைத்தன்மை அற்ற தன்மையும் இயல்பாகவே பல கேள்விகளை எழுப்புகின்றன: என்டிஏ மந்திரிகளும் அதிகாரிகளும் தங்கள் 'கமிஷன்' பங்கை உறுதி செய்வதற்காகவே, இந்த இசைக்கருவிகளின் கொள்முதலை அவசர அவசரமாக நிறைவேற்றினார்களா?