புதுடெல்லி
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே எல்லை காவல் மாநாடு ஜூன் 8-ல் தொடங்கப்படுகிறது. இதில், இயக்குநர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. அப்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்படும்.
வங்காளதேசத்தில் மாணவர் புரட்சியால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், அந்நாட்டில் நடந்த பொது தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமர் தாரீக் ரகுமான் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.
பிரதமர் ரகுமான் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்காக வங்காளதேச இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அஷ்ராபுஜாமன் சித்திக் தலைமையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு இந்தியாவுக்கு வருகை தருகிறது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, புதுடெல்லியில் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு, இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்காளதேச எல்லை காவல் படை அதிகாரிகள் இணைந்து இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள்.
இரு நாடுகளுக்கு இடையே நடைபெற கூடிய இந்த சந்திப்பில், வங்காளதேசத்தில் இருந்து எல்லை வழியே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழையும் ஊடுருவல்காரர்களை பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.
இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்காளதேச குற்றவாளிகளை தடுப்பது, வேலி அமைப்பது, வ இந்திய ஊருடுவல் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை, எல்லை உள்கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள், நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பிற விசயங்கள் பற்றி ஆலோசனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கின்றது.