புதுடெல்லி,
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின் படி பிறந்தநாள் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் வழங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, அது ஒரு அடையாள சான்று மற்றும் முகவரி சான்று மட்டுமே தவிர பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வருமான வரித்துறை மற்றும் UIDAI ஆகியவை இணைந்து இந்த விதியை இன்னும் கடுமையாக்கியுள்ளன.
ஆதாரில் உள்ள பிறந்த தேதி பல நேரங்களில் தோராயமாக பதிவு செய்யப்படுவதால், நிதி சார்ந்த ஆவணமான பான் கார்டுக்கு அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆதார் கார்டை நீங்கள் பான் கார்டுக்கு பயன்படுத்தவே முடியாது என்று அர்த்தமல்ல. உங்களுடைய பெயரை உறுதிப்படுத்தவும், முகவரியை உறுதிப்படுத்தவும் உதவும். ஆனால் பிறந்த தேதி என்று வரும்போது மட்டும் ஆதார் அல்லாத வேறு ஒரு ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பான் கார்டு விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதிக்காக, பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு ஊழியராக இருந்தால் பணி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து கொள்ளலாம்.
ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்து பான் கார்டு பெறுவதை தடுக்கவே புதிய நடைமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்தது. மாற்றத்தின்படி பான் கார்டில் உள்ள விவரங்களும் ஆதாரில் உள்ள விவரங்களும் சரியாக பொருந்த வேண்டும். ஆனால் பிறந்த தேதியை உறுதிப்படுத்த மட்டும் மேலே சொன்ன மாற்று ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ பிறந்தநாள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.