கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் புதிதாக அமைந்துள்ள பா.ஜனதா அரசு, பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் பணிகளை பிரபல மத அமைப்பான 'இஸ்கானுக்கு' வழங்கி உள்ளது. மாணவர்களுக்கு சைவ உணவு வழங்க வேண்டும் என்ற இந்த அமைப்பின் பரிந்துரையின் பேரில், மாணவர்களுக்கான மதிய உணவில் இருந்து முட்டை நீக்கப்பட்டு உள்ளது.
இதை சட்டசபையில் நேற்று பட்ஜெட் அறிவிப்பின்போது நிதி மந்திரி ஸ்வபன் தாஸ்குப்தா அறிவித்தார். அதே நேரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த சுத்தமான உணவு வழங்கப்படும் எனவும், மேலும் இதற்கான செலவும் அதிகரித்து இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது. பா.ஜனதா அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
குறிப்பாக மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் மத அமைப்பை இணைத்தற்கு திரிணாமுல் காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் சட்டசபையில் அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. இதைப்போல முட்டைகள் மாணவர்களுக்கு புரதம் மற்றும் ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதுடன், அவை கலாசார ரீதியாகப் பரிச்சயமானவையாகவும், மாணவர்களின் வருகைக்கு ஒரு முக்கிய ஊக்கியாகவும் விளங்குவதாக ஆசிரியர்கள் மத்தியிலும் போர்க்குரல் எழுந்துள்ளது. ஆனால் அரசின் முடிவை நியாயப்படுத்திய முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, மாணவர்களுக்கு நல்ல, தூய்மையான உணவு கிடைக்கும், கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.