கொல்கத்தா,
இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்காளம் இருக்கிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த 2011 முதல் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வந்தார்.
அதேநேரம் மாநிலத்தில் புதிய சக்தியாக பா.ஜனதா உருவெடுத்து வந்தது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 3 இடங்களை பெற்று மாநில சட்டசபையில் கணக்கை தொடங்கிய அந்த கட்சி. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 77 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது.
மாநில அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த கட்சி ஆட்சியை பிடிக்க கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக போராடியது.
இந்த பரபரப்பான சூழலில் மாநிலத்தில் கடந்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வன்முறை, முறைகேடு போன்ற விதிமீறலில் சிக்கிய பால்டா தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு, வருகிற 21-ந்தேதி மறுதேர்தல் நடைபெறும் என தேர்தல் கமி ஷன் அறிவித்தது.
முன்னதாக இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என 4 முனைப்போட்டி நிலவியது. எனினும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையேயான களமாகவே இருந்தது.
கொதிக்கும் கோடையை விட அதிகமாக அனலடித்த மேற்கு வங்காள தேர்தல் களத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழலில் பால்டா தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 293 இடங்களில் பதி வான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் கருத்துக்கணிப்புகள் கட்டியம் கூறியபடியே தொடக்கம் முதலே பா.ஜனதா முன்னிலை பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுக்கொண்டே இருந்தனர்.
கிராமம், நகர்ப்புறம், எல்லைப்பகுதி என மாநிலம் பரவலாக பா.ஜனதா வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மாநிலத்தில் ஆட்சியமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதா இரவு 10 மணி நிலவரப்படி, 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த அந்த கட்சி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இந்த முறை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கடந்த தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ், ஆம் ஜனதா உன்னாயன் கட்சிகள் தலா 2 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, மதசார்பற்ற முன்னணி ஆகியவை தலா ஓரிடமும் பெற்றன.
இந்தநிலையில், புதிய பாஜக அரசு வருகிற மே 9 ஆம் தேதி பதவியேற்கும் என்று பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேற்கு வங்காளத்தில் கடைசி நாள் பிரசாரத்தின்போது, 'அடுத்து மேற்கு வங்காள பாஜக அரசு பதவியேற்பு விழாவுக்கு வருவேன்' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும் மே 9 ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.