புதுடெல்லி,
இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் குவிந்து உள்ளன என கடந்த 2017ம் ஆண்டு வெளியான சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அன்புள்ள பிரதமர் அவர்களே, சுவிட்சர்லாந்துக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் ஏன் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளன? என டாவோஸ் நகர மக்களிடம் தயவு செய்து கூறுங்கள். உங்களது உடனடி தகவலுக்காக அறிக்கை ஒன்றையும் இதனுடன் நான் இணைத்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்று பயணத்தினை விமர்சித்து வரும் ராகுல் காந்தி, பணக்காரர்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது என்றும் மற்றும் அவர்களது கடன்களை தள்ளுபடி செய்கிறது என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு அதிகாரி நரசிம்ம ராவ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிலடி செய்தியில், இந்தியாவில் இதுபோன்ற சமத்துவமற்ற முறையானது, உங்கள் குடும்பத்தின் உரிமையான நேரு காங்கிரசின் வறுமையை நிலைத்திருக்க செய்யும் மாதிரி அரசாட்சியின் தொடர்ச்சியால் ஏற்பட்ட பேரிடர் என குறிப்பிட்டு உள்ளார். அதனால் காங்கிரஸ்காரர்களே பணக்காரர்கள் ஆனார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோடி அரசானது வளர்ச்சியை நோக்கி ஓய்வின்றி உழைத்து வருகிறது. அதற்காக ஜந்தன் யோஜனா மற்றும் உஜ்ஜவாலா யோஜனா போன்ற ஏழைகளுக்கு ஆதரவான பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
வறுமையை ஒழிப்போம் என்பது காங்கிரசின் வாசகம் ஆக உள்ள வேளையில், கூட்டு முயற்சி மற்றும் வளர்ச்சி என்பது பாரதீய ஜனதா அரசின் மாதிரியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
#BJP #Modi #RahulGandhi #PM #Congress