தேசிய செய்திகள்

தடுப்பூசி விலை உயர்வுக்கு எதிர்ப்பு; சீரம் நிறுவனத்தை கொள்ளைக்காரன் என்று விமர்சித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கொரோனா தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை அரசாங்கத்திற்கு ரூ.400 என்றும், தனியாருக்கு ரூ.600 என்றும் உயர்த்தி அறிவித்து உள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோரக்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராதா மோகன் தாஸ் அகர்வால், கொரோனா தடுப்பூசி விலை உயர்வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லாவை, கொள்ளைக்காரனைவிட மோசமானவன் என்றும், இந்திய அரசு அவர்கள்

மீது தொற்றுநோய் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு விமர்சித்து உள்ளார்.இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் விலையை உயர்த்தி லாபம் பார்க்கிறார் என்றும் சாடி உள்ளார். சாமிநாதன் ஆணையம், விவசாய விளைச்சல் உயர்வுக்கு பார்முலா வகுத்ததுபோல, அவர்கள் தடுப்பூசிக்கு லாப கணக்கு போட்டுள்ளனர் என்றும் ஒப்பிட்டுள்ளார்.