புதுடெல்லி,
"ஜென்சி" தலைமுறையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பா.ஜ.க.வில் சிறப்பு அணி உருவாக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டம், நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் மூலம் பா.ஜ.க. அரசு ஒரு படிப்பினையை கற்று இருக்கிறது. 12 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட தங்களது கட்சி மீது இளைய தலைமுறைக்கு ஏன் இந்த வெறுப்பு? என்பதை ஆராய்ந்தது. இளைஞர்களிடத்தில் இடதுசாரி சிந்தனை தலைதூக்கி இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மேலும் பல காரணங்களை ஆராய்ந்த பா.ஜ.க. இளம் தலைமுறையை கவர்ந்து அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இதன் அடிப்படையில் மந்திரிகளை பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்த அரசு அறிவுறுத்தியது.
இதுபோல பா.ஜ.க. எம்.பி.க்களும் தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் "ஜென்சி" தலைமுறையினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு என்று பா.ஜ.க.வில் ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அணியில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச் செயலாளர்கள் ஸ்மிருதி இரானி, வினோத் தாவடே மற்றும் குஜராத் மாநில மந்திரி ஹர்ஷ் சங்கவி, சத்தீஷ்கார் மாநில மந்திரி ஓ.பி.சவுத்ரி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழு 14 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தி, கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும்.
புதிய தலைமுறையின் சிந்தனை, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இளைஞர்களுக்கான வாய்ப்புகளை முன்னெடுக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.