பெங்களூரு,
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கெண்டனர்.
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தெகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
கர்நாடகத்தில் தற்போது பதவி வகிக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தொடர கட்டாயம் 6 தொகுதிகளில், பாஜக வெற்றி பெறுவது அவசியம் ஆகும். இதனால், கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில், பாஜக 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 1 இடத்தில் மஜத முன்னிலை வகிக்கிறது.2 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
தற்போதுள்ள முன்னணி நிலவரம், வாக்கு எண்ணிக்கை இறுதி வரை நீடிக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சிக்கு எந்த சிக்கலும் ஏற்படாது எனத்தெரிகிறது.