தேசிய செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அனைத்து 117 இடங்களிலும் போட்டியிட பா.ஜ.க. முடிவு

பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் பஞ்சாப்புக்கு வருகை தந்துள்ளார்.

சண்டிகார்

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அனைத்து 117 இடங்களிலும் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 2027-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. தனித்து போட்டியா? அல்லது ஷிரோமணி அகாலி தள கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியா? என்பது பற்றி பரவலாக யூகங்கள் வெளியாகி வந்தன.

117 தொகுதிகளில் போட்டி

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் பஞ்சாப்புக்கு வருகை தந்துள்ளார். அவருடைய 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, மொகாலி விமான நிலையத்திற்கு வந்த சந்தோஷை பா.ஜ.க. மாநில தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லான் மற்றும் கட்சியின் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அவர், பாட்டியாலா நகரில் நடந்த முதல் மண்டல அளவிலான கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பஞ்சாப் மாற்றத்திற்கு தயாராகி விட்டது என்றும் அதனை மெய்ப்பிக்கும் வகையிலான வேலைகளில் பா.ஜ.க. முழு அளவில் தயாராகி விட்டது என்றும் கூறினார்.

வருகிற சட்டசபை தேர்தலில், பஞ்சாப்பில் அனைத்து 117 தொகுதிகளிலும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று கூறினார். இதேபோன்று, இன்று (25-ந்தேதி) லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில் மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் அவர் பங்கேற்கிறார்.