புதுடெல்லி,
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சரத் யாதவ் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், ரூபாய் நோட்டு தடையின் தீமைகளை விளக்கும்வகையில், நவம்பர் 8ந்தேதி, நாடுதழுவிய அளவில் கூட்டாக போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை அனுசரிக்கும் வகையில் தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்தது. டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 8-ம் தேதி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக நவம்பர் 8-ம் தேதியை தேசிய கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பா.ஜனதா முடிவு செய்து உள்ளது. தேசம் முழுவதும் நவம்பர் 8-ம் தேதியை பாரதீய ஜனதா கருப்புப்பண ஒழிப்பு தினமாக கொண்டாடும் என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.