புனே,
இது குறித்து புனே மாவட்டம், பாரமதி நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரவிருக்கும் 5 மாநிலத் தேர்தலிலும் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று நான் பேசுவது தவறு. அந்தந்த மாநில மக்கள்தான் இதற்கான முடிவை எடுப்பார்கள். கேரள மாநிலத்தில் இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என நம்புகிறேன்.
அசாம் மாநிலத்தில் உள்ள தேர்தல் சூழல் பற்றி எனக்கு நன்கு தெரியும். அங்கு பாஜகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புகிறேன். அசாம் மாநிலத்தில் மற்ற கட்சிகளைவிட பாஜக வலுவாக இருக்கிறது. ஆனால், மற்ற 4 மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவும். ஏனென்றால், மற்ற 4 மாநிலங்களில் பாஜக,பாஜக கூட்டணியைவிட, மற்ற கட்சிகள் வலுவாக இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் நாட்டுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கும்.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, மத்திய அரசு குறிப்பாக பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களுக்காகப் போராடிவரும் என்னுடைய சகோதரியை (மம்தா பானர்ஜி) தாக்க முயன்றுள்ளார்கள். ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநிலமும் முதல்வர் மம்தா பானர்ஜி பக்கம்தான் நிற்கிறார்கள். ஆதலால், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.