தேசிய செய்திகள்

கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா !

கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக 15 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா மீது சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் முடிவு எடுக்காததால், சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

அரசியல் குழப்பம் காரணமாக கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 18 ஆம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பாஜக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்ற அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான எடியூரப்பா, ஒட்டலில் உள்ள மைதானத்தில் சக எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். எடியூரப்பா கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT