தேசிய செய்திகள்

டெல்லி சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதித்ததில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று 183 பயணிகளுடன் டெல்லி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் உள்ள கழிவறை அருகே ஒரு 'டிஸ்யூ பேப்பரில்' விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மோப்ப நாயுடன் அங்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் இருந்த 183 பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அப்போது தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனால் விமான நிலைய ஊழியர்களும், பயணிகளும் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து 183 பயணிகளுடன் அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் தான், 'டிஸ்யூ பேப்பரில்' மிரட்டல் செய்தியை எழுதியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டலால் இண்டிகோ விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.