சித்ரதுர்கா :-
சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா. இவரது மகன் சீராயி (வயது 7). இந்தநிலையில் சீராயி வீட்டில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எந்திரம் ஒன்று சிறுவனின் காலில் விழுந்தது. இதில், சீராயிக்கு காயம் ஏற்பட்டது. அவனை யசோதா, சிக்கஜாஜூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு டாக்டர் ஊசி போட்டார். அப்போது சீராயி உடனே மயங்கி விழுந்தான்.
இதையடுத்து, சிறுவனை மேல் சிகிச்சைக்காக ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர் கூறினார். இந்தநிலையில், யசோதா சீராயியை ஆம்புலன்ஸ் மூலம் ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கஜாஜூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்தநிலையில் சீராயின் பெற்றோர் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சிக்கஜாஜூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.