பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் 5 வயது சிறுமி வசித்து வருகிறாள். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் அந்த சிறுமி மற்றும் தனது வீட்டின் அருகில் உள்ள 18 வயது நிரம்பாத சில சிறுவர்களுடன் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது 5 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்ற சிறுவர்கள் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் சிறுமியிடம் கேட்டபோது, அவள் தன்னுடன் விளையாடிய சிறுவர்கள் தான் தன்னை சீரழித்ததாக கூறினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக பெங்களூரு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் குழுவை கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு சம்பவம் நடந்த இடம் மற்றும் போலீஸ் நிலைய பகுதி ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தன்னுடன் விளையாடிய சிறுவர்களால், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.