தேசிய செய்திகள்

பெங்களூருவில் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பதற்கு சமம்

உலகில் அதிக வாகன நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு,

ஐடி நகரமான பெங்களூருவில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன நெரிசல் மற்றும் தொழிற்சாலை புகையால் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் வாரத்துக்கு 2 சிகரெட் புகைப்பதற்கு சமம் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.

மாதத்திற்கு 10 சிகரெட்டுகள்

பெங்களூருவில் நிலவும் தற்போதைய காற்று மாசுபாட்டின் காரணமாக, அங்குள்ள பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது அவர்களின் நுரையீரலை கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் வெளியில் செல்லும் பொதுமக்கள் இந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்கு சமமாகும். புகைப்பிடிக்கும் பழக்கமே இல்லாத ஒரு நபர் பெங்களூருவில் வசிப்பதன் மூலமாக மட்டுமே, சிகரெட் பிடிப்பவருக்கு நிகரான நுரையீரல் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.

2-வது இடம்

உலகில் அதிக வாகன நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது. பெங்களூருவில் சராசரியாக தினமும் 3 ஆயிரம் புதிய வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இவற்றில் 2 ஆயிரத்து 100 இருசக்கர வாகனங்கள், 900 கார்கள், ஆட்டோ, லாரி, பஸ்கள் ஆகும். இதனால் பெங்களூருவில் வாகன நெரிசல் அதிகரிப்பதுடன் காற்று மாசும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமும் 1.55 கோடி வாகனங்கள் ஓடுகின்றன

பெங்களூருவில் கடந்த ஆண்டு(2025-26) 7 லட்சத்து 87 ஆயிரத்து 671 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. பெங்களூருவில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 94 ஆயிரத்து 899 ஆகும். அண்டை மாநில வாகனங்களையும் சேர்த்து பெங்களூருவில் தினமும் 1.55 கோடி வாகனங்கள் ஓடுகின்றன என்று சொல்லப்படுகிறது.

கடுமையான பாதிப்பு

பெங்களூரு நகரின் சில்க் போர்டு ஜங்ஷன், மெஜஸ்டிக், வைட்பீல்டு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் காற்றின் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக மோசமாக பதிவாகி வருகிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

முகக்கவசம்

வெளியில் செல்லும் போது பொதுமக்கள் தரமான முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், காற்று மாசு அதிகமுள்ள நேரங்களில் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.