டேராடூன்
சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.1.5 லட்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது என்று முதல்-மந்திரி முன் மாணவி பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்தது.
உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி டேராடூன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, 17 வயது மாணவியான சாய்ரா அவர் முன் பேசியது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும்போது, தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி ஒன்றில் தங்க பதக்கம் வென்றேன்.
இதனால், ரொமேனியா நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வானேன். ஆனால், என்னால் ரூ.1.5 லட்சம் ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. அதனால், அந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறினார். அப்போது முதல்-மந்திரி தமி அவரை தேற்றினார்.
அந்த சிறுமியின் இந்த பேச்சு சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்தியில், பா.ஜ.க. ஆட்சியில், ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டு அதனை கொடுக்க முடியாமல் போனதில் சிறுமியின் இந்த வாய்ப்பு நழுவியுள்ளது. பா.ஜ.க. அரசில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது என குற்றச்சாட்டாக கூறியது.
இதுதொடர்பான வீடியோவானது, முதல்-மந்திரி, பா.ஜ.க. மற்றும் அரசு சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன. இது சர்ச்சையை அதிகப்படுத்தியது.
இந்த சூழலில், சிறுமியின் முழு வீடியோ வெளியானது. அதில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.7 லட்சம் தொகைக்கான செலவை ஏற்க முன் வந்தது. மீதமுள்ள ரூ.1.5 லட்சம் பணம் நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பு பற்றி பள்ளியிலோ அல்லது வேறு யாரிடமோ நான் கூறவில்லை.
அதனால் பணமும் திரட்ட முடியவில்லை. ரொமேனியாவுக்கும் செல்ல முடியவில்லை என்று கூறினார். லஞ்சம் என்றோ அரசு அதிகாரிகள் பணம் கேட்டனர் என்றோ அவர் எதுவும் கூறவில்லை. இதனால் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.