தேசிய செய்திகள்

மனைவியை தூக்கிலிட்டு துடிதுடிக்க கொன்ற கொடூர கணவன்: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் கதறல்

கர்நாடக மாநிலத்தில் தங்களது மகள் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடும் காட்சியை வீடியோ காலில் பார்த்த பெற்றோர் என் மகளை கொல்லாதே என்று கூறி கதறி அழுதனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, அவர் துடித்துக் கொண்டிருக்கும் காட்சியை வீடியோ கால் மூலம் நண்பர்களுக்கும், மனைவியின் பெற்றோருக்கும் காட்டிய கொடூர கணவன் கைது செய்யப்பட்டார்.

குடும்ப பிரச்சினை

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண். இவரது மனைவி பாக்யஸ்ரீ. இந்த தம்பதியினர் இடையே குடும்ப பிரச்சினை மற்றும் சந்தேகம் போன்ற காரணங்களால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ தனது கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். பின்னர் தற்போது குடும்ப பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் பிரவீண்.

தூக்கிலிட்டு கொலை

இந்த நிலையில் வீட்டிற்கு அழைத்துவந்த மறுநாளே பிரவீண் தனது மனைவி பாக்யஸ்ரீயை மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கம் அடைந்த மனைவியை வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிலிட்டு தொங்க விட்டுள்ளார். இதனால் பாக்யஸ்ரீயின் கழுத்து இறுகி அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

அதிர்ச்சி சம்பவம்; கொடூர கணவர் கைது

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிரவீணை கைது செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், "மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாக்யஸ்ரீயின் காட்சியை பிரவீண் தனது செல்போனில் பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன், பாக்யஸ்ரீயின் தந்தை, தாயாருக்கும் வீடியோ கால் செய்து அந்த காட்சியை காண்பித்துள்ளார். அப்போது தங்களது மகள் உயிருக்கு போராடும் காட்சியை பார்த்த பெற்றோர் என் மகளை கொல்லாதே என்று கூறி கதறி அழுததைத்தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தனது மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்தபோது, அவர் துடித்துக் கொண்டிருக்கும் காட்சியை வீடியோ கால் மூலம் நண்பர்களுக்கும், மனைவியின் பெற்றோருக்கும் காட்டிய கொடூர கணவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.