தேசிய செய்திகள்

அரியானா: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பாலா,

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று (ஜன.24) மாலை அவர்களது காரில் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

SCROLL FOR NEXT