தேசிய செய்திகள்

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி; ஒருவர் காயம்

சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர், போலீசார், என்.டி.ஆர்.எப். வீரர்கள் உடனடியாக சென்றனர்.

மும்பை

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில், ஜனதா நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இதில் 2 முதல் 3 கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில், 6 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர ஒருவர் காயமடைந்து உள்ளார்.

6 பேர் மீட்பு

சம்பவம் பற்றி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டு ஜூலையில் கட்டப்பட்ட 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. அது, அருகேயிருந்த 3 வீடுகள் மீது சரிந்தது என்றார். இதில், ஒரே குடும்பத்திலுள்ள ஒரு பெண், 5 குழந்தைகள் என 6 பேர் மீட்கப்பட்டனர். மற்றொரு சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

மொத்தம் 6 பேர் மீட்கப்பட்ட போதிலும், அவர்களுடைய நிலைமை மோசமடைந்து உள்ளது என அவர் கூறினார். சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர், போலீசார், என்.டி.ஆர்.எப். வீரர்கள் உடனடியாக சென்றனர். ஆம்புலன்சுகளும் சென்றன. மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், அதற்கிடையிலும் மீட்பு பணி நடந்து வருகிறது.