பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது.
இதனால் பாஜகவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவை கூடியபோது ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்குமாறும், அவை நம்பிக்கையை எப்போதும் முதல்-மந்திரி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.
காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்ததாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். அதை தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடகா பாஜக தலைவருமான எடியூரப்பா, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் வரை சட்டப்பேரவையில் இருந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகா ஆளுநர் வாஜ்பாய் வாலா முதல்-மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாளை நண்பகல் 1.30 மணிக்குள் முதல்-மந்திரி குமாரசாமி அரசு கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.