தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3000.. மந்திரி சபை ஒப்புதல்

மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.3000 வழங்க மந்திரி சபை அனுமதி.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் இன்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி அக்னிமித்ரா பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் ஜூன் 1 முதல் அன்னபூர்ணா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்க மாநில மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.

குடியுரிமை திருத்தத் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள பெண்களும், வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்ப்பதற்காக தீர்ப்பாயங்களை அணுகியுள்ள பெண்களும் அன்னபூர்ணா திட்டத்தின்கீழ் நிதியுதவியை பெறுவார்கள்.

அரசு ஊழியர்கள், அதனுடன் இணைந்த சட்டப்பூர்வ குடிமை அமைப்புகள், கல்வி வாரியங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக 7வது மாநில ஊதிய குழுவை அமைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

மத அடிப்படையில் குழுக்களுக்கு வழங்கப்படும் அரசு உதவியை ஜூன் மாதம் முதல் நிறுத்த மந்திரிசபை முடிவு செய்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தற்போதுள்ள மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலையும் அரசு ரத்து செய்துள்ளதுடன், இட ஒதுக்கீட்டு தகுதியை தீர்மானிக்க ஒரு விசாரணை குழுவையும் அமைக்கும்.

இவ்வாறு அக்னிமித்ரா பால் கூறினார்.