புதுடெல்லி,
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.
இதை பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தகவல் திருட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் பேசுகையில் தெரிவித்தார். சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவாதத்தின் போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை பதில் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.