புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் கனடா அரசு சார்பில் இந்தியாவிற்கு 25 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் 50 வெண்டிலேட்டர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடா அரசு சார்பில் இந்தியாவிற்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகளை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.