தேசிய செய்திகள்

’தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது’ - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

தமிழகத்துக்கு அதிக தண்ணீர் வழங்கியுள்ளோம்

”தமிழகத்திற்கு நாம் ஏற்கெனவே திறந்துவிட்ட தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 400 டிஎம்சி தண்ணீருக்கும் மேல் நாம் தமிழகத்துக்கு வழங்கி இருக்கிறோம். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்ததால் தமிழகத்துக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கப்பட்டது.

கர்நாடக அணைகளுக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 3,500 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய அளவு நீர் இல்லை என கூறியபோதும் காவிரி மேலாண்மை ஆணையம் அதனை ஏற்கவில்லை.

ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு

கடுமையான சூழ்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கூறிவிட்டோம். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே பயன்

வீணாகும் தண்ணீரம் மேகதாது அணை கட்டுவதன் மூலம் சேமித்து வைக்க முடியும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடு தான் அதிக பயனை பெறும். மேகதாது அணையால் கர்நாடகாவுக்கு மின்சர உற்பத்தி மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.