தேசிய செய்திகள்

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நாளை முதல் நீக்கம்

விமானக் கட்டணப் போக்குகளை அமைச்சகம் நிகழ்நேர அடிப்படையில் கண்காணித்து வருகிறது.

புதுடெல்லி,

இண்டிகோவின் பெரிய அளவிலான விமானச் சேவை இடையூறுகளால் ஏற்பட்ட டிக்கெட் விலைகளின் அசாதாரண உயர்வைத் தடுப்பதற்காக, உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு டிசம்பர் 6 அன்று தற்காலிக உச்சவரம்பு விதிக்கப்பட்டது. அது முதல் விமானக் கட்டணப் போக்குகளை அமைச்சகம் நிகழ்நேர அடிப்படையில் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் 23-ந்தேதி (நாளை) முதல் விமானக் கட்டண உச்சவரம்பு நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் அதிகபட்ச தேவை, இடையூறுகள் அல்லது அவசர காலங்களில், கட்டணங்களில் அதிகப்படியான அல்லது நியாயமற்ற உயர்வு காணப்பட்டால், அது தீவிரமாகப் பார்க்கப்படும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நாளை முதல் நீக்கப்படுவதால் விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏற்கனவே டிக்கெட் விலையை சில விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ள சூழலில் தற்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.