தேசிய செய்திகள்

இடுக்கியில் ஆற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி; 3 பேர் காயம்

சாலையில் இருந்து விலகிச் சென்ற கார், சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள சின்னார் ஆற்றில் கவிழ்ந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளராடாவை சேர்ந்தவர் எர்னஸ்ட் (வயது 38). இவர் இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து காரில் கட்டப்பனாவுக்கு புறப்பட்டார்.

இடுக்கி மாவட்டம் கரிந்தருவி பகுதியில் உள்ள கட்டப்பனா-குட்டிக்கானம் நெடுஞ்சாலையில் காலை 6.30 மணியளவில், கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. சாலையில் இருந்து விலகிச் சென்ற கார், சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள சின்னார் ஆற்றில் கவிழ்ந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் விரைந்து சென்று ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் காரை மீட்டனர். பின்னர் அதில் இருந்த எர்னஸ்ட் உள்பட 5 பேரை மீட்டு பீருமேடு தாலுகா மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி எர்னஸ்ட் பரிதாபமாக இறந்தார்.

காரில் பயணித்த திவ்யாஜோதி (29), நவ்யா ஜோதி (26). அஜின் (36) மற்றும் ஜோஹான் (5) ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து உப்புத்தாரா போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.