ஜி-பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கட்டண வழிமுறை (யு.பி.ஐ.) மூலமான பரிவர்த்தனைகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு, செல்போன் ரீசார்ஜ் மற்றும் பெட்ரோல், கியாஸ் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதன சந்தைகளுக்கு 0.02 சதவீத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.75 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அஞ்சன் தத்தா என்ற வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில், 2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தில் திருத் தப்பட்ட 10ஏ பிரிவின் அரசியல்சாசன செல்லுபடியாதலை கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.மேலும் எந்த எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணமில்லா பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை தீர்மானிக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை இந்த சட்டப்பிரிவு அரசுக்கு அளிப்பதாகவும் குற்றம் சாட் டப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையில், வெறும் ஒரு பத்திரிகை வெளியீடு என்று விவரிக்கும் ஒன்றின் மூலம் கட்டண விகிதங்கள், பரிவர்த்தனை வரம்புகள், உச் சவரம்புகள் மற்றும் துறைசார் வகைப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணங்களை நிர்ணயிக்கும் முழுமையான செயல்பாட்டு ஆவணம் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறைந்த லாப வரம்பு கொண்ட வணிகர்களை கடுமையாக பாதிக்கும் எனவும், மறைமுகமாக நுகர்வோருக்கு சுமை அதிகரிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு சுதந்திரமாக மறுஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.