புதுடெல்லி
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தபோது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கியதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. சுவான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டது குறித்து, சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்குகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் ஏற்கனவே அறிவித்து இருந்தன.
அதன்படி, தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறையின் சார்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டது தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளது.
இந்நிலையில், சி.பி.ஐ.யும் இன்று தனது மேல்முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.