புதுடெல்லி,
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறுதேர்வுக்கான தேதியை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ வெளியிடலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் குறிப்பிட்டார். பிரச்சனைகளுக்கு இடையே காங்கிரஸ், மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், சிபிஎஸ்இ சேர்மன் அனிதா கர்வால் ராஜினாமா செய்ய வேண்டும், இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்துவந்த சிபிஎஸ்இ சேர்மன் அனிதா கர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மாணவர்களுக்காக பணியாற்றி வருகிறோம். நாங்கள் தேர்வுக்கான தேதியை விரைவில் வெளியிடுவோம். நாங்கள் மாணவர்களுக்கு சாதகமாக இறுதி முடிவை எடுப்போம், என கூறிஉள்ளார். செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்னதாக அனிதா கர்வால், மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.