புதுடெல்லி,
9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என புதிய சுற்றறிக்கையை சி.பி.எஸ்.இ. (CBSE) அனுப்பி உள்ளது.
2027-28ம் கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு செல்பவர்கள் பொதுத்தேர்வில் மூன்றாம் மொழி பொதுத்தேர்வு எழுத தேவையில்லை. அதேநேரம் மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். மாணவர்களுக்கு மூன்றாம் மொழி சார்ந்த பள்ளி அளவிலான அக மதிப்பீட்டில் (internal assessment) தேர்ச்சி பெற்றால்தான் 10ஆம் வகுப்பு சான்றிதழ் கிடைக்கும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை சி.பி.எஸ்.இ.யின் மதிப்பீட்டு முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மூன்றாம் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாத 9ஆம் வகுப்பு மாணவர்கள் 10ஆம் வகுப்பிற்குத் தேர்ச்சி செய்யப்பட்டாலும், அவர்கள் அடுத்த கல்வியாண்டில் அந்த நிலுவையில் உள்ள தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். திருத்தப்பட்ட இந்தக் கொள்கை, 2026-27-இல் 9-ஆம் வகுப்பிலும், 2027-28-இல் 10ஆம் வகுப்பிலும் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
ஜூலை 10ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கையின்படி, 2027-28 கல்வியாண்டிலிருந்து 10-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இடைநிலைக் கல்வித் தேர்வுக்கான தேர்ச்சிச் சான்றிதழைப் பெற 'R3' என்று குறிப்பிடப்படும் மூன்றாம் மொழிக்கான பள்ளி அளவிலான மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.
10ஆம் வகுப்பின் போது நடைபெறும் இந்த உள்ளக மதிப்பீட்டில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினால், இறுதிப் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பள்ளிகள் மறுமதிப்பீட்டை நடத்த வேண்டும். இப்பாடத்திற்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றாலும், 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கு இந்த உள்ளக மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாணவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மூன்றாவது மொழிப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகிறது. மேலும் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3வது மொழிப் பாடத்தை கற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் இந்திய மொழி ஒன்றை 3வது மொழியாக எடுத்து படிப்பதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை, சி.பி.எஸ்.இ.யின் தேர்ச்சி சான்றிதழ் பெறுவதற்கு, 3வது மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
10ஆம் வகுப்பில் 3வது மொழி தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மறுமதிப்பீட்டிற்கான (re-assessment) வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.