புதுடெல்லி,
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 25 பேரிடம் விசாரணையை முன்னெடுத்து உள்ளோம். இரு வினாத்தாள்களும் தேர்வுக்கு முன்னதாகவே கிடைத்து உள்ளது. 18 மாணவர்கள், 5 டியூசன் ஆசிரியர்கள் மற்றும் இருவரிடம் விசாரித்தோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தரப்பில் புகாரில் தெரிவிக்கப்பட்ட புகாரில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் கொடுக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள் வெளியானதை அடுத்து மறுதேர்வு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் வினாத்தாள் கசிவு தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு தகவலும் கிடையாது, அத்தகைய ஒரு விஷயம் வெளிப்பட்டால், நாங்கள் டெல்லிக்கு வெளியேவும் விசாரணை குழுக்களை அனுப்புவோம். வினாத்தாளின் நகல் வெளியானது எப்படி என்பது தொடர்பாக விசாரிக்கிறோம், மற்றும் வினாத்தாள்கள் எப்படி வெளியே சென்றது, பயனாளர்களை அடைந்தது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம், என டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக 10 வாட்ஸ் அப் குரூப்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. 10 வாட்ஸ் அப் குரூப்களை அடையாளம் கண்டு உள்ள டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் ஒவ்வொரு குரூப்பிலும் 50-60 பேர் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையும், சம்பந்தப்பட்டவர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.