Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம்: பனிப்போர் உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பனிப்போர் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2022-23 கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 11, 12-ம் வகுப்புகளுக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து அணிசேரா இயக்கம், பனிப்போர் காலகட்டம், ஆசிய-ஆப்பிரிக்க பிராந்தியங்களில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, மொகலாய அரசவைகள் பற்றிய விவரங்களும், தொழிற்புரட்சி பற்றிய தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல 10-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் உணவு பாதுகாப்பு அத்தியாயத்தில் இருந்து விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. உருது கவிஞர் பைஸ் அகமது பைசின் 2 கவிதைகளின் மொழியாக்கம் செய்யப்பட்ட பகுதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை குறித்த பகுதிகளும் இனி இருக்காது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) வட்டாரங்கள் தெரிவித்தன.